திமுகவும், பாஜகவும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை: டி.ஜெயக்குமார்!

திமுகவும், பாஜகவும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியினை அதிமுக அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இளைஞர்களுடன் டி. ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

சமூகத்துக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவது அதிமுகவினரின் பண்பாகும். சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் மட்டும் போதாது, விளையாட்டு வீரர்களுக்கு அதிமுக அளித்தது போல் இட ஒதுக்கீடு போன்ற முக்கியத்துவத்தை திமுக அரசு கொடுத்துள்ளதா? நான்கு ஆண்டுகளில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என்பதை வெளிப்படையாக பேசுவதற்கு அவர் தயாரா? சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் நடக்கிறது தவிர, விலைவாசி உயர்வு பற்றியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியோ திமுக அரசு இதுவரை வாய் திறந்து பேசவில்லை.

அரசுத் துறைகளில் பல லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கு ஸ்டாலின் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக, பாஜக இருவரும் புரிதலில் இருப்பதால் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை. மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் வளர்ச்சி என்பது அதிக அளவில் இல்லை. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை அமலில் இருப்பதால்தான் 40% மாணவர்கள் உயர்கல்வி பயிலும் அளவுக்கு மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகம் கல்வித்துறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தாக்கப்படுவதை தடுக்க கடிதம் எழுதுவதை தவிர, முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுதெல்லாம் முத்தரப்பு பேச்சுவார்த்தையை திமுக அரசு நடத்தியது உண்டா? தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், தாக்குவதும், மீனவர்களின் உடமைகளை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வரும் நிலையில், அவற்றை தடுக்க ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. மீனவர்கள் மீது தாக்கப்படும் சம்பவங்கள் என்பது பத்து விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது 100 மடங்காக உயர்ந்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.