மும்மொழிக் கொள்கையின் பெயரில் தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து சென்னை, மதுரை உட்பட 6 இடங்களில் நாளை கண்டனப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளதாவது:-
தமிழர்கள் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமற்கிருதத்தைத் திணித்தவர்கள் யார்? வடவர்கள்! அவர்களின் வாரிசுகள்தாம் இப்போது தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்கிறார்கள். எப்போதிருந்து? இந்திய விடுதலைக்கென்று செயல்பட்ட காங்கிரசுக் கட்சி தனது தொடக்க காலத்திலிருந்து இந்தியை, இந்தியா முழுமைக்கும் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக ஆக்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. 1919-இல் சென்னையில் தென்னிந்திய இந்திப் பிரச்சார சபையைத் தொடங்கி வைத்தவர் காந்தி! அப்போது இந்தியாவின் ஆட்சிமொழி ஆங்கிலம்! ஆங்கிலேய இனத்திற்கு இந்தியா அடிமைப்பட்டிருந்தது. ஆதிக்க இனத்தின் மொழி ஆட்சிமொழி! இப்போது இந்தியாவின் ஆதிக்க ஆற்றல்கள் ஆரிய பிராமண-ஆரிய வைசிய-இந்தி இன ஏகாதிபத்திய வாதிகள்! அவர்களின் புனித மொழி சமற்கிருதம்! அவர்களின் தொடர்பு மொழி இந்தி! அயல் இன ஆதிக்கத்தின் செயல்பாடுகளில் ஒன்று அதன் தாய் மொழித் திணிப்பு!
எனவே தமிழர்களின் இந்தி எதிர்ப்பு என்பது ஆரிய பிராமண-ஆரிய வைசிய – இந்தி இன ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்க எதிர்ப்போடு இணைந்திருக்க வேண்டும்! இதோ நமது உடனடிக் கோரிக்கைகள்: இந்திய அரசே!
1. இந்திய அரசின் 2020 புதிய கல்விக் கொள்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு மொத்தமாக விலக்குக் கொடு! தமிழ்நாட்டிற்கு உரிய கல்வித் தொகை அனைத்தையும் முழுமையாக – உடனடியாக வழங்கு!
2. இந்தித் திணிப்பை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிடு! தமிழர்கள் இந்தியைத் தவிர்த்துவிட்டு, தென்னாட்டு மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகக் கல்வியில் ஏற்க வேண்டும் என்று நயவஞ்சகமாகக் கூறி, இந்தித் திணிப்பிற்கு இன்னொரு வாசலைத் திறக்காதே!
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை, சர்வாதிகாரி இந்திராகாந்தி 1976-இல் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்திய அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப்பட்டிய(Concurrent List)லுக்கு மாற்றினார். அதை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டுவா!
4. உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, மாநில அரசுக்கு மிஞ்சியுள்ள கல்வி அதிகாரத்தையும் பறிக்கின்ற பல்கலைக் கழக மானியக் குழுவை (UGCயை) நிரந்தரமாகக் கலைத்திடு! பல்கலைக் கல்விக்கென அனைத்து மாநிலக் கல்விப் பேராளர்களைக் கொண்ட பரிந்துரைக்குழு அமைத்திடுக!
5. இந்திய அரசின் ஒரே ஆட்சி மொழி இந்தி மொழியே எனக் கட்டளை இடும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343-ஐயும் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து முற்றிலுமாக நீக்கு. உலகின் மற்ற கூட்டாட்சி நாடுகளில் இருப்பதுபோல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள – தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்கு!
6. தமிழ்நாடு அரசே, தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை அறிவித்திடு!
இக்கோரிக்கைகளை முன்வைத்து சென்னை, பெண்ணாடம், திருச்சி, குடந்தை, ஓசூர், மதுரை ஆகிய இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ் மக்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! இவ்வாறு பெ. மணியரசன் கூறியுள்ளார்.