டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்ஜி-11 விமானம் டெல்லியிலிருந்து துபாய் நோக்கி 150 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்புடன் இருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “விமானத்தில் இண்டிக்கேட்டர் விளக்கில் கோளாறு ஏற்பட்டதால் கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது. பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கோரவில்லை. சாதாரணமாகதான் தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. கராச்சிக்கு மாற்று விமானம் சென்றவுடன் பயணிகள் அனைவரும் துபாய்க்கு புறப்பட்டுச் செல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், விமானப் போக்குவரத்து இயக்ககம் வெளியிட்ட செய்தியில், விமானத்தின் இடது டேங்கில் எரிபொருள் குறையும் அசாதாரண சூழலை கவனித்த குழுவினர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டனர். தொடர்ந்து கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. விமானம் கிளம்பும் போது எரிபொருள் கசிவு எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.