2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் விஜய் உறுதியாக உள்ளார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை. இதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி அல்லது கர்நாடகாவைப்போல பழனிசாமி விஜய் ஆகியோர் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருக்கலாம் என்று பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விஜய்க்கு ஆலோசனை வழங்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நானும் விஜயும் நண்பர்கள். சகோதரர்கள். இருவரும் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். எங்களுக்கு நீண்ட கால இலக்கு உள்ளது. தமிழக அரசியல் களத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. அந்த அனுபவத்துடன் விஜய்க்கு உதவி செய்வேன், மேலும், நான் அவரை தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக்க உதவுவேன். என்னை தமிழகத்தில் உள்ளவர்களுக்குத் தெரிவதுபோல, பிகாரில் உள்ளவர்களுக்கு விஜயை தெரியும். அவரால் எனது கட்சிக்கு உதவவும் முடியும். தமிழகத்தில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
ஊழல், மதவாதம், வாரிசு அரசியல் ஆகியவைதான் தமிழகத்தில் பெரிய அரசியல் அரசியல் சவால்கள். தேர்தலில் போட்டியிட அதிக பணம் தேவைப்படுகிறது. தற்போது தமிழகத்தில் மதவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு பாஜகதான் காரணம், அவர்களுக்கு தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதம் உள்ளது. தமிழக அரசியலில் வாரிசு அரசியல் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு நீண்ட அரசியல் பயணம் உண்டு. அவரை வாரிசு அரசியல்வாதியாக கருத முடியாது. ஆனால், உதயநிதியை அப்படிப் பார்க்க முடியாது. அவர் விரைவாக துணை முதல்வராக மாறிவிட்டார். எனவே, வாரிசு அரசியலை எதிர்த்துப் போராட வேண்டும்.
விஜய் ரசிகர்களின் பலத்தை வாக்குகளாக மாற்ற, கட்டமைப்புப் பணியில் ஈடுபட வேண்டும். நவீனத் தொழில்நுட்ப உலகில், இந்தப் பணியை குறுகிய காலத்தில் சாதிக்க முடியும். தமிழக மக்கள் அவரை அரசியல் மாற்றத்துக்கான நட்சத்திரமாகப் பார்க்கிறார்கள். மேலும், சிறந்த அரசியல் தலைவராகவும் அவரை மதிப்பிடத் தொடங்கியுள்ளனர். அவரது பேச்சைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வதுடன், மக்களை நேரில் சந்திக்க வேண்டும். நிச்சயம் அவற்றை மேற்கொள்வார். இன்னும் ஒரு மாதத்தில் தீவிர அர சியல் களப் பயணத்தில் ஈடுபடுவார்.
தமிழக மக்கள் தேடும் நேர்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் தகுதி விஜய்க்கு உண்டு. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு பெரிய ஆச்சரி யத்தை தரும். விஜய் மிகப் பெரிய சக்தியாக உருவெடுப்பார். அவர் தனித்துப் போட்டியிடவே விரும்புகிறார். நிச்சயம் கூட்டணி கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை இணைக்க அதிமுக முயற்சிக்கும், ஆனால், தவெக உறுதியாக தனித்தே போட்டியிடும். தனித்து நிற்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.