அரசு ஊழியர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வுதிய திட்டத்தை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: ஐ.பெரியசாமி!

பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மீது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர் எனவும், அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வுதிய திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்த ஆண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையிலேயே பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக ஆட்சி மாறி மாறி தமிழகத்தில் அமைந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. 2001 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டுமென அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என கூறியுள்ளார் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (04.03.25) விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை மாற்று திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தோட்டக்கலைத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட ஆறு துறைகள் சார்பில் 257 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 87 லட்சத்து 10 ஆயிரத்து 885 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நகர் ஊரமைப்பு துறை சார்பில் ரூ. 4¾ கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை சேம நிதியிலிருந்து முதலமைச்சர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 400 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி உள்ளார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் 100 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இன்று மட்டும் ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு. இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. எந்த காலத்திலும் இப்படி வழங்கப்படவில்லை. இந்த அரசுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார். மிகச் சிறப்பாக திட்டங்கள் நிறைவேற்றி வருகிறார்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு வருடமாக பழைய பென்ஷன் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தமிழக அரசு மீது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நம் முதல்வர் மீதும். ஆட்சி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வுதிய திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.