எனக்கு சினிமாவில் வழிகாட்ட யாருமில்லை. வேறு மொழிகள் கூட தெரியாமல்தான் இருந்தேன் என்று சமந்தா கூறினார்.
சமந்தா நடித்த, ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளியானது. அடுத்து, ‘மா இண்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து நடிக்கிறார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இப்போது அதிலிருந்து மீண்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சினிமாவில் 15 வருடத்தை நிறைவு செய்துள்ளார் சமந்தா. இதற்காகச் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது 15 ஆண்டு கால சினிமா வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமந்தா கூறியதாவது:-
முதல் படமான ‘மாஸ்கோவின் காவிரி’யில் என் நண்பர் ராகுல் ரவீந்தரனுடன் நடித்தேன். அந்த படம் பற்றிய நினைவுகள் அதிகம் இல்லை. அடுத்த படமான ‘யே மாயா சேசவே’ (விண்ணைத் தாண்டி வருவாயா -தெலுங்கு பதிப்பு) படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் இப்போதும் நினைவில் இருக்கிறது.
சினிமாவில் பதினைந்து வருடங்கள் என்பது நீண்ட காலம். இப்போது நான் நடித்த சில படங்களைப் பார்க்கும்போது, இவ்வளவு மோசமாகவா நடித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஆனால் நான் அப்படித்தான் கற்றுக்கொண்டேன். எனக்கு சினிமாவில் வழிகாட்ட யாருமில்லை. வேறு மொழிகள் கூட தெரியாமல்தான் இருந்தேன்.
எல்லாவற்றையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு சினிமாவில் நண்பர்கள் இல்லை, தொடர்புகள் இல்லை, உறவினர்கள் இல்லை. எல்லாம் புதிதாக இருந்தது, பிறகு வேலையைக் கற்றுக் கொண்டேன். இந்த 15 வருடங்கள் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. இப்போதுஎன் பலம், பலவீனம் தெரியும் என்பதால் அடுத்த 15 வருடத்தை ஆவலாக எதிர்பார்க்கிறேன். இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.