தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது: அன்பில் மகேஷ்!

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது. மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தவறான தகவலை தந்ததாக திமுக எம்பிக்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கூறினர். முதல்-அமைச்சரும், திமுக எம்பிக்களும் பொய் குற்றச்சாட்டு கூறுகின்றனர். பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்தது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கடிதத்தை வெளியிட்டு மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதிவு இருந்தார். மேலும் தேசிய கல்விக் கொள்கையை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம் என்று தமிழக முதல்-அமைச்சரை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களைவிட தமிழ்நாட்டில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு மத்திய கல்வித்துறை மந்திரி பிரதான் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்தநிலையில், தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை. என்.இ.பி-ஐ தமிழகம் எப்போதும் எதிர்த்து வருகிறது. தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது. 15/03/2024 கடிதத்தில் தேசிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறவில்லை. குழு அமைத்து ஆராயப்படும் என்றே தமிழக அரசு கடிதம் எழுதியது. தேசிய கல்விக்கொள்கையை தொடர்ந்து தமிழகம் எதிர்தே வந்திருக்கிறது.

மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது. மாநிலத்திற்கு நன்மை தரும் மத்திய அரசு திட்டங்களையே தமிழக அரசு ஏற்கிறது. தமிழ்நாடு அரசின் கல்வி முன்மாதிரியானது. எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனுள்ளது. உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானது, இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் பலம், பலவீனம் அல்ல என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.