எட்டு வருஷமா பாஜக என்னத்த சாதிச்சிங்கன்னு சொல்லுங்க: சீமான்!

ஒரு வருஷத்தில் திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் பாஜக, எட்டு ஆண்டுகளில் என்ன சாதித்தது என்பதை விளக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுசூழல் பாதிக்கப்படும். எனவே விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் முடிவை தமிிழக அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும். இதுதொடர்பாக, இத்தொகுதியின் எம்எல்ஏ சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்து இந்த திட்டத்தை தடுத்திட வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பதாக பாஜகவினர் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. கடந்த ஓராண்டில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என சொல்லிவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக இதுவரை என்ன சாதித்துள்ளது என்பதை விளக்கிட வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.