சென்னை 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
* முதல்வர் கிராம சாலை திட்டத்தின் கீழ் 6,100 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள் 2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
* அரசுப் பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் (Centre of Excellence) ரூ.50 கோடி செலவில் உருவாக்கப்படும்.
* நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளும், உலக அளவிலான QS தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள்ளும் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம்பெறச் செய்திடச் செயல்திட்டம் உருவாக்கப்படும்.
* 1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.
* அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
* பத்து லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்.
* அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்.
* நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய திட்டம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
* ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்.
* ரூ.150 கோடியில் புராதானக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
* திருவான்மியூர் – உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 14.2 கி.மீ நீளம்.
* ரூ.2,100 கோடியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைக்கப்படும்.
* ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
* ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளப்படும்.
* பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்கு தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ரூ.50 கோடியில் வியன் திறன்மிகு மையம் அமைக்கப்படும்.
* கோவை – சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
* ரூ.350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் கட்டப்படும்.
* ரூ.11,721 கோடியில் புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றில் வெள்ளிமலை – 1,100 மெகாவாட் திறன் ஆழியாறு – 1,800 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும்.
* 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
* கடல்சார் வள அறக்கட்டளை – ரூ.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
* 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.
* ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும்.
* ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். இவற்றில் சென்னை: 950, மதுரை: 100, கோயம்புத்தூர்: 75 பேருந்துகள் இயக்கப்படும்,
* ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம் அமைக்கப்படும்.
* விண்வெளித் தொழில்நுட்ப நிதி – ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
* ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கொடுங்கையூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை மற்றும் பல்வேறு பணிகள் நிறுவப்படும்.
* உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.
* பூநாரைப் பறவைகள் சரணாலயம் தனுஷ்கோடியில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை சைதாப்பேட்டை – தாடண்டர் நகரில் ரூ.110 கோடி செலவில் 190 குடியிருப்புகள் கட்டப்படும்.
* கிண்டி – வண்ணாரப்பேட்டையில் பன்முகப் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும்.
* 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* தமிழகத்தில் 25 இடங்களில் அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம் உருவாக்கப்படும்.
* 10 இலட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் உதவிக்கு ரூ.2.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு.
* ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 செயல்படுத்தப்படும்.
* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.
* 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
* ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
* ரூ.100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் உருவாக்கப்படும்.
* ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க, 14 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் படிப்படியாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை வழங்க ரூ.36 கோடி ஒதுக்கீடு.
* ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
* ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும்.
* சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும்.
* 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றின் மூலம் ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
* மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறும்.
* நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
* சென்னை வேளச்சேரியில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயன் பெறுவர்,
* ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
* முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும், இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.
* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
* சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் என்ற வகையில் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும்.
* ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
* ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள்.. மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள்.
* சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.
* தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
* ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
* ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் மாவட்டம் நாவாப் பகுதிகளில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.
சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, இந்த பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. இது, நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள 2-வது பட்ஜெட் ஆகும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இன்றைய பட்ஜெட்தான் இந்த அரசு தாக்கல் செய்யும் 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழகம் என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், ‘பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு நடைபோடுகிறது. சமநிலை தவறாமல் தமிழகத்தை வழிநடத்துவோம்.” என்றார்.
“INEQUALITY IS A CHOICE, BUT WE CAN CHOOSE A DIFFERENT PATH” – அதாவது “சமநிலையின்மை என்பது ஒரு வாய்ப்பு. ஆனால் நாம் வேறு பாதையை தேர்வு செய்வோம்.” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியின் மேற்கோளை நிதியமைச்சர் பயன்படுத்தினார். நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதும், அதிமுக எம்எல்ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.