எங்க கடல் பகுதிக்கு வராமல் இருப்பதே தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அமைச்சர்!

இலங்கை கடற்பகுதிக்குள் வராமல் இருப்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும், வெவ்வேறு சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட மீனவர்களும், பல படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியா – இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா சிவகங்கை, மதுரை மறை மாவட்ட ஆயர் லுர்த் ஆனந்த் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கச்சத்தீவு திருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது. வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. கடந்த முறை இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இந்த முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இந்திய மீனவர்கள் பிரச்சனை என்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை. இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும். சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை. அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது. எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி கடற்றொழிலாளர் நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகக்கூடும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கடற்றொழிலாளர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில், தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல. இலங்கை கடற்பகுதிக்குள் வராமல் இருப்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர நிலையான தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.