ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தையைப் போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவை இல்லை என ஆவேசமாகப் பேசியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
விசிக தேர்தல் வெற்றி விழா பொதுக் கூட்டம் நேற்று இரவு விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பங்கேற்றுப் பேசினார். அப்போது திருமாவளவன் பேசியதாவது:-
நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம், விசிக பலவீனப்படும் என பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போதும் அப்படி சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விசிக நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும், அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும் விசிகவை அவர்களால் சேதப்படுத்த முடியாது. அதற்கு இந்த இயக்கத்தின் களமும், கொள்கை, கோட்பாடும் முற்றிலும் புதிது. சினிமா கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எவரையும் திசை மாற்ற முடியாது. நடிகர் ஒருவர் கட்சி தொடங்கிவிட்டார், இந்த இளைஞர்கள் எல்லாம் அந்தப் பக்கம் ஆட்டு மந்தைகளைப் போல திரும்புவார்கள் எனக் கூறுகின்றனர். ஒரு நடிகரின் பின்னால் இந்த இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்கள் வெளியே செல்வதுதான் கட்சிக்கு சிறப்பு. அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸை புரிந்துகொண்டு திருமாவளவனோடு பயணிப்பவர்கள் தான் உண்மையான சிறுத்தைகளாக இருக்க முடியும். அவர்களை எந்தக் கொம்பனாலும் ஈர்க்க முடியாது, திசைமாற்ற முடியாது.
25 ஆண்டு காலமாக, ஒரு பட்டாளத்தை விசிக அதே வேகத்தில் வைத்துக்கொண்டுள்ளது. நமக்கு எந்த சரிவும் வீழ்ச்சியும் இல்லை. 25 ஆண்டுகள் கடந்து கட்சி தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி. திமுக, அதிமுகவோடு நாம் இணைந்துள்ளதால் தான் வெற்றி என சிலர் ஏளனம் பேசுகின்றனர். பாமக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால், ஆண்ட கட்சிகளே விசிக கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம். இன்றைக்கு விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
தற்போது ஒரு நடிகர், தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை, ஆனால் அடுத்த முதல்வர் அவர்தான் என பேசுகின்றனர். ஆனால், நான் தொடக்கத்தில் ஏராளமான ஓட்டுகள் பெற்றபோது என்னைப் பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர், நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிக்குள் தான் ஒதுக்குகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு தான், நாம் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. இப்போது மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். எங்களுக்கு கொள்கைதான் பெரிது என்பதால் குறைந்த தொகுதியை ஏற்றுக் கொள்கிறோம். தமிழக மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே நாங்கள் தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நமது கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.