பிரதமர் நரேந்திர மோடி, வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு இதுவரை செல்லாதது ஏன் என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். மேலும் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்; மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார் வைகோ.
ராஜ்யசபாவில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
மணிப்பூர் நிலவரம் பற்றி இங்கே ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன. எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர நரேந்திர மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது? நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister. ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.
இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்றார் ராஜ்யசபா துணைத் தலைவர். ஆனால் நான் பேசியதில் எந்த அன் பார்லிமெண்ட்ரி வார்த்தை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய வைகோ திடீரென, எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு! எப்பக்கம் புகுந்து வந்துவிடும் இந்தி எத்தனை பட்டாளம் கூட்டிவரும்? கன்னங் கிழிந்திட நேரும் — வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என முழங்கினார்.
இந்த நாடாளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது.மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை குப்பைத் தொட்டியில்தான் தூக்கி வீச வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நான் வைகோ. என்னை பேசக் கூடாது என சொல்ல. நீங்கள் யார்? நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன்; நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்தி மொழியை ஏற்காத- புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது. இவ்வாறு வைகோ பேசினார்.