100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்: அமைச்சர் சேகர்பாபு!

‛‛ஒரு 5 மணிநேரம் கூட போலீஸ் காவலில் இருக்க முடியாத நீ.. நாட்டுக்காக எப்படி உழைப்பாய்? திருமணமான ஓராண்டு காலத்தில் தன்னுடைய இளமை பருவத்தில் மிசா எனும் கொடுமையை சிறைச்சாலையில் கழித்தவர் முதல்வர். அவரை எதிர்த்து நின்றால் கால் தூசுக்கு கூட உன் போராட்டம் எடுபடாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நேற்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாஜக தலைவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட சென்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். இதேபோல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலை 6 மணி ஆகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனால் அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். ஏன் எங்களை விடுவிக்கவில்லை என்று கேள்வி கேட்டார். அதுமட்டுமின்றி அவர் கொல்கத்தா செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் போலீசார் வெளியே அனுமதிக்காததால் அண்ணாமலை டென்ஷன் ஆனார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அப்போது ‛‛5,000 டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளது” பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக சேகர்பாபு கூறியதாவது:-

உத்தர பிரதேசத்தில் மோடியின் சர்க்கார் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு போய் ஆணி அடித்து முதலில் படத்தை மாட்டட்டும். நாங்கள் வேண்டுமானால் ஆணி சப்ளை செய்கிறோம். அதன்பிறகு இங்கு வரட்டும். இன்னும் கடுமையாக பேசுவேன். ஏங்க அசிங்கமாக இல்லையாங்க. ஒரு கட்சியின் தலைவன் போராடுகிறான். ஒரு 5 மணிநேரம் மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். 5 மணி ஆகிவிட்டது. ஊருக்கு செல்ல விமானத்தை தவறவிட்டுவிட்டேன். 3 விமானங்கள் தவறிவிட்டது. மாலை 6 மணி ஆகிவிட்டது என்னை வெளியே விடுங்கள் என்று காவல்துறையிடம் சண்டையிடுகிறாயே, நாட்டுக்கு போராடுவதாக கூறுகிறாயே, ஒரு 5 மணிநேரம் கூட போலீஸ் காவலில் இருக்க முடியாத நீ.. நாட்டுக்காக எப்படி உழைப்பாய்.

எங்கள் முதல்வர் திருமணமான ஓராண்டு காலத்தில் தன்னுடைய இளமை பருவத்தில் மிசா எனும் கொடுமையை சிறைச்சாலையில் கழித்தவர். அவரை எதிர்த்து நின்றால் அவரது கால் தூசுக்கு கூட உன் போராட்டம் எடுபடாது. அமைச்சராக இருந்து அல்ல. அண்ணா சொன்னது போல் அமைச்சர் என்பது தோளில் போட்ட துண்டு. கொள்கை என்பது தான் இடுப்பில் கட்டிய வேஷ்டி. ஆகவே துண்டு பெரியதா? வேஷ்டி பெரியதா? என்று வருகின்றபோது வேஷ்டி தான் பெரியது என்று ஆட்சி அதிகாரம் என்ற துண்டை உதறிவிட்டு களத்திலேயே ஒரு அண்ணாமலை அல்ல 100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.