தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
கொடி கம்பம் வைப்பது என்பது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கலாச்சாரமாக உள்ளது. 25 அடி, 10 அடி, 50 அடி என்று ஒவ்வொரு பகுதிகளிலும் பொது இடங்களில் கட்சிகள் சார்பில் கொடிகம்பம் வைப்பதும், அதில் விழா நடத்துவதும் நடக்கிறது. இந்த கொடிகம்பங்களுடன் கல்வெட்டுகளும் செதுக்கப்படுகின்றன. இப்படி தமிழ்நாடு முழுவதுமே எல்லா கட்சிகளும் பொது இடங்களில் கம்பங்களும், கல்வெட்டுகளையும் வைத்துள்ளன. இவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சில பகுதிகளில் பட்டா நிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அல்லது யாராவது வீட்டின் முன்பு ஆக்கிரமித்தும் கொடி கம்பங்கள் அரசியல் கட்சிகள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் கொடி கம்பங்கள் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொது நல வழக்கில் ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தையும் கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மற்றும் முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றப்பட வேண்டும். அப்படி அகற்றவில்லயெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.