தெற்கு குஜராத், மும்பையில் புரட்டிபோட்ட கனமழை!

தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு பாகிஸ்தான் முழுவதும் குறைந்த காற்றழுத்தம் மற்றும் தொடர்புடைய சூறாவளி சுழற்சி காரணமாக, தென்மேற்கு பருவமழை தற்போது குஜராத் மாநிலம் முழுவதும் தீவிரமாக உள்ளது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் அடுத்த நான்கு நாட்களில் மேலும் தீவிரமாக மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 11 அன்று, கட்ச் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே ஜாம்நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தினுள் இருந்தவர்களை அப்ப்குதி மக்கள் கடும் சிரமத்திற்கு பின் கயிறு கட்டி மீட்டுள்ளனர். கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் மஸ்கா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மும்பையில் 4-வது நாளாக பெய்த பலத்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்தது. மும்பையில் கடந்த மாதம் பருவ மழை தொடங்கியது. இதில் கடந்த 3 நாட்களாக மும்பையில் மழை கொட்டி தீர்த்தது. இந்தநிலையில் 4-வது நாளாக நேற்றும் மும்பையில் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதேபோல மழை காரணமாக மஸ்ஜித் அருகே ரெயில் தண்டவாளத்தையொட்டி இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக துறைமுக வழித்தடத்தில் சுமார் 15 நிமிடங்கள் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று மிக,மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல மும்பையில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.