ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விஜயின் தவெக வரவேற்பு!

ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் இன்று சம்மட்டி அடி கொடுத்தது. மேலும் நிறைவேற்றாமல் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்களை நிறுத்தி வைத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்றும் ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறியது. ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை. அரசியல் அமைப்பின் நோக்கத்துக்கு விரோதமாக இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெகவின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது மேதகு ஆளுநரின் கடமை. ஆனால், நமது மாநில ஆளுநரோ தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார். இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறி ஆக்கினார். மாநிலத் தன்னாட்சி உரிமையை அவமதிப்பதாகவும் இச்செயல் இருந்தது.

இதோ இப்போது, மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம், ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துள்ளது. மாநில உரிமை காக்கும், மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை தமிழக வெற்றிக் கழகம் மனதார வரவேற்கிறது.

தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று. மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு. இதை நம் கழக வெற்றித் தலைவரின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.