“மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடியில் திமுக ஈடுபடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக தலைமை மக்களிடமும், மாணவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் விளாசியுள்ளார்.
நீட் தேர்வு விலக்கு கோரி இன்று அனைத்து கட்சிக் கூட்டம் சென்னையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நீட் விலக்கு கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தப்படும். தொய்வில்லாமல் சட்ட போராட்டம் நடத்தினால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்நிலையில் தான் நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவை விமர்சனம் செய்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப்பெரிய பொய் என்பதே திமுக தலைமையின் அறமற்ற அரசியல்.
* பொய்வேடம் தரிக்கும் கபட நாடக திமுக தலைமையின் பொய்முக வரலாறு, அன்றில் இருந்து இன்று வரை நில்லாமல் நீள்கிறது.
* எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும்என்பதற்காக நூற்றுக்கணக்கான பொய்களின் பட்டியலை தேர்தல்அறிக்கையாக 2021 தேர்தலின்போது(ம்) வெளியிட்டது.
* அப்பட்டியலின் முக்கியப்பொய்களில் ஒன்று தான் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சி (வாக்குறுதி எண்: 160) என்ற அறிவிப்பு. அத்துடன் தேர்தல் களத்தில், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் இருப்பதாக சொல்லி மோசடிப்பிரசாரம் வேறு.
* ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது என்று சொல்லி தப்பித்தனர்.
* பொய்களாலும், மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாக தப்பித்தவர்கள், இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால் மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்.
* அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் என்ற ஒரு நாடகத்தையும் இப்போது அரங்கேற்றி உள்ளனர்.
* இயலாமையை மறைப்பதற்காக, எல்லாவற்றிக்கும் அனைத்து கட்சி கூட்டம், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம், சட்டமன்ற பேரவையில் தனித்தீர்மானம் என ஏதாவது ஒருவகையில் திசைதிருப்பி மக்களை ஏமாற்றுவது தான் திமுக தலைமையின் தொன்று தொட்ட வழக்கம்.
* இதோ இப்போது, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆலோசனைகளை வேறு முதலமைச்சர் கேட்டிருக்கிறார். நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்கிறது என்று சொன்னவர்கள் இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று ஆலாபனை அன்றி வேறனெ்ன?
* நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் நமது சமரசமற்ற நிலைப்பாடு.
* மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்படுவதே நிரந்தர தீர்வு. சிறப்பு ஒத்திசைவுப்பட்டியலில் கல்வியை சேர்க்க வேண்டும் என்பது ஒரு தற்காலிக தீர்வு என்றும் நாம் கூறினோம்.
* நீட் தேர்வை ரத்து செய்வதற்காக மட்டுமின்றி, நிரந்தரமாக மக்கள் பக்கம் நிற்கும் நாம், எப்போதும் இப்படித்தான் எதிலும் தீர்வை நோக்கியே யோசிப்போம்.
* வெற்று விளம்பர மாடல் திமுக அரசோ, மக்களை ஏமாற்றும் கபட நாடக கச்சேரிகளை மட்டுமே நிகழ்த்துகிறது.
* மக்கள் விழித்துக் கொண்டனர். இனி அவர்களை வஞ்சித்து ஏமாற்ற முடியாது.
* இதுவரை எம் மாணவச் செல்வங்களையும், பொதுமக்களையும் ஏமாற்றியதற்கு திமுக தலைமை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
* திமுக தலைமை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்கும் தொடர் அரசியல் மோசடி மக்கள் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப்போகின்றனர். மக்களுடன் மக்களாக இணைந்து நின்று அதை நிகழ்த்தி காட்டுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு. நிச்சயமாக அது 2026 ல் நிகழும். நிகழ்ந்தே தீரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.