தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆளுநர் ஆர் என் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் எதிரொலியாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டபடி இருந்தார். இதனால் தமிழ்நாடு அரசு, ஆளுநர் இடையே சுமூக உறவானது இல்லாமல் இருந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது தவறானது என்று கூறியது. மேலும் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்ட விரோதம் என்றும், ஒருதலைபட்சமானது என்றும் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 10 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்து இருப்பதற்கு ஆளுநருக்கு வீட்டோ போன்ற அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். 10 மசோதாக்களை ஜனாதிபதி பரிசீலனைக்காக நிறுத்திவைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே ஆளுநரின் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்” என்று அதிரடியாக தீர்ப்பளித்தது.
தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால், இந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18.11.2023 தேதியில் ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற மசோதாவும் சட்டமாகியுள்ளது. இதனால் இனிமேல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் தமிழக முதல்வர் வசமாகியுள்ளது.