பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, டுவிட்டர் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்ததற்காக நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மதக் கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும், மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சவுதாமணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமூக ஊடகத்தில் யாரோ வெளியிட்ட பதிவை சவுதாமணி மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் விதமாக வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக உலா வந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தின் 8 கோடி இந்து மக்கள் வணங்கும் தெய்வங்களை, சமூக ஊடகங்கள் மூலம் கேலி கிண்டல் செய்து கொச்சைப்படுத்தி பதிவுகள் போடுவது இன்று வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே கறுப்பர் கூட்டம் மூலம் தமிழ் கடவுள் முருகனை, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தினார்கள். சமீபத்தில் யூ டு புரூட்டஸ் என்ற சேனலில் தில்லை நடராஜர் நடனமாடும் கோலத்தை தரம் தாழ்த்தி விமர்சித்தனர். இவர்கள் மீதெல்லாம் பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுத்தும் இதுவரை திமுக அரசும், காவல்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே சமயம் சவுதாமணி மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு தகுந்த விளக்கம் கொடுத்த பிறகும் அவர் பா.ஜ.கவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். காழ்புணர்வோடு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ள திமுக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.