“திமுக அரசு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற, பிரிவினைவாதத்துடன் செயல்படுகிறது. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை” என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. பின்னர் இது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:-
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். யாரெல்லாம் பெண்களை பற்றி கேவலமாக பேசுகிறார்களா, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெலுங்கு, மலையாளம் பேசுபவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கையில் இந்தி மொழி திணிக்கப்படவில்லை. மாணவர்கள் விருப்ப மொழியை தேர்வு செய்து படிக்கலாம் என கூறப்படுகிறது. திமுக அரசு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற, பிரிவினை வாதத்துடன் செயல்படுகிறது. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. தனி தமிழ்நாடு, தனி கொடி வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.
நாடு வல்லரசாக மாற வேண்டும் என்றால், எல்லா மாநிலங்களும் ஒன்றாக தான் இருக்க வேண்டும். எல்லாம் மாநிலங்களும் ஒன்றாக இருந்தால் தான், நாடு வளர்ச்சி அடைய முடியும் என்று அம்பேத்கர் கூறினார். இந்திய நாடு பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டதற்கான காரணமே, நிர்வாக வசதி சீராக இருக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் தேர்தலை முன்னிறுத்தி எதாவது தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இது மக்களுக்கும், தேசத்துக்கும் விரோதமானது. மக்கள் இதை சிந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இனி திமுக ஆட்சி தொடர வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.