அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார்.
கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு, 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இவர் மீதும், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகாரின்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி 2022 ஜனவரி 5ல் கைது செய்யப்பட்டார். புகார் அளித்த ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதிப்பதாக கூறி, கடந்த மாதம் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ராஜேந்திர பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்பு மீதான நிலை என்ன?” கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆளுநர் தரப்பில் உரிய அனுமதி வழங்காமல் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. வழக்கு ஆவணங்களை மொழிபெயர்த்து வழங்கும்படி ஆளுநர் அலுவலகம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து ஓரிரு நாட்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.