சைவம் மற்றும் வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியிடம் இருந்தும் பொன்முடியின் இந்தப் பேச்சுக்கு எதிராக கண்டனக் குரல் ஒலித்தது. இந்நிலையில், திமுகவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடியின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது எனவும், குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் ஏ. அஷ்வத்தாமன் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் சைவம், வைணவம் குறித்து, பட்டை அணிதல், திருநாமம் அணிதல் உள்ளிட்ட இந்து தர்ம குறியீடுகளை செய்கையாக காண்பித்து, அமைச்சர் பொன்முடி அவதூறாகவும், கொச்சையாகவும் பேசியுள்ளார். வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், இரு பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் அவரது பேச்சு அமைந்திருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சினமூட்டும் நோக்கத்திலும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும், பெண்களின் மாண்பை குலைக்கும் விதத்திலும் அவர் பேசியுள்ளார். எனவே, அமைச்சர் பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.