வக்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க காரணமே எங்கள் வாதம்தான்: தவெக!

மத்தியில் ஆளும் பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க காரணமே, எங்களது சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியின் வாதம்தான் என்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இஸ்லாமியர்களின் உரிமையான வக்பு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த மனுவிற்காக, இந்தியாவின் பிரபலமான மூத்த வழக்கறிஞர், மதிப்பிற்குரிய திரு.அபிஷேக் சிங்வி அவர்கள் ஆஜராகி வாதிட்டார். மனுவில் உள்ள நியாயமான கோரிக்கைகள் அடங்கிய அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு உச்சநீதிமன்றம், வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்பு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இவ்வாறு தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பெஞ்ச் 2 நாட்கள் விசாரித்தது. இந்த 2 நாட்கள் விசாரணைக்குப் பின்னர் வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட 6 ரிட் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்பு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இஸ்லாமியர்களின் உரிமையான வக்பு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு.அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சமூக வலைதளங்களில், நடிகர் விஜய் கட்சியின் மனு விசாரணைக்கு ஏற்கப்படவே இல்லை; அவரது வழக்கறிஞர் வாதிடவே இல்லை; ஆனால் வக்பு சட்டத்துக்கான தடை உத்தரவுக்கு உரிமை கோருகிறாரே என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.