கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்: முத்தரசன்!

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசின் வருவாய் துறையில் 15,000-க்கும் அதிகமான கிராம உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வருவாய்த் துறையில் பணியாற்றக் கூடிய அனைவரும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த கிராம உதவியாளர்கள் மட்டும் சிறப்பு காலமுறை ஊதியத்திலேயே பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

இவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படாததால், கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசு வேலை முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுள்ளன. எனவே, அவர்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்று, அவர்களுக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.