தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தியை தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் தேவேந்திர பட்னாவிஸ் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காக கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மராத்தி மட்டுமே கட்டாய மொழி என கூறுகிறார் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களை தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்த பேட்டி.
இந்நிலையில், பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும் பின்வருவனவற்றை தெளிவுபடுத்த வேண்டும்.தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தியை தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் தேவேந்திர பட்னாவிஸ் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறதா? அவ்வாறெனில் தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியை பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக அநியாயமாக தமிழகத்துக்கு தராமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா? இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.