டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது ஆலைகளுக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது இது தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு கேட்டோம். மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசினால்தான் உரிய பதில் கிடைக்கும் என்று, இன்று பேரவையில் பேச முயன்றோம், ஆனால் இந்தப் பிரச்னை குறித்து பேசுவதற்கு பேரவைத் தலைவர் முழுமையாக அனுமதியை வழங்க மறுத்து விட்டார்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி, மாதத்திற்கு ரூ.450 கோடி, ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல் நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். “ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதில் ரூ.10 வசூல் செய்தால், ஆண்டுக்கு ரூ.5,500 கோடி ஊழல் நடந்திருப்பது தெரியவருகிறது,” என்று அவர் விளக்கினார்.
மேலும், டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தின்போது, இந்த வசூலை உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் அளித்ததாக ஒப்புக்கொண்டதாக கூறியதை ஊடகங்கள் வெளியிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். “இவையெல்லாம் சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது ஜனநாயகப் படுகொலை. மக்களின் பிரச்சனைகளைப் பேசுவது எங்கள் கடமை, பதில் சொல்வது அரசின் கடமை,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அண்மைக்காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு பிரச்னையால், தமிழ்நாடு குடிநீர் வாரிய மின் மோட்டார்கள் முறையாக செயல்படாததால், சென்னை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்க சிரமமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர், இதனால் விவசாய தொழிலாளர்களுக்கும் முறையாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்க சென்று விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்து, நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.