சென்னையில் ஏப்ரல் 25-ல் அதிமுக மாவட்ட செயலர் கூட்டம்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஏப்.25) சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல் 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு தேர்தல்களை சந்தித்து வரும் நிலையில், வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக இருந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போது பாஜகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளது. பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, அது குறித்து சிறுபான்மையினருக்கு விளக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், அதற்கான உண்மையான காரணம் அறியாமல் அதிமுக மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில், சிறுபான்மையினரிடம் அதை விளக்க முடியாமல் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (ஏப்.25) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு கூட்ட உள்ளார். இதில் ஏன் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துக்கொண்டது என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணி மட்டுமே. இது கொள்கை கூட்டணி இல்லை. பாஜக கொள்கைகளை அதிமுக ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பதை சிறுபான்மையினரை சந்தித்து விளக்குமாறு மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இன்று எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்க உள்ளார். வரும் மே 2-ம் தேதி செயற்குழு கூட்டமும் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.