பகல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

ஜம்மு – காஷ்மீரின் பகல்காமில் பாதிக்கப்பட்ட மருத்துவர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பகல்காம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மருத்துவர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். பரமேஸ்வரன் மனைவியிடம் விசாரித்து தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது கணவரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து, தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

முன்னதாக, ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலாச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நபர்கள் தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு நேற்று ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.