துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:-
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ளும் மகத்தான அறிவிப்பை உச்ச நீதிமன்றம் சென்று பெற்றுவந்த முதல்வருக்கு மே 3-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த துறைக்கு சுமார் ரூ.37 ஆயிரம் கோடி நிதிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இந்த 5 ஆண்டுகாலத்தில் மட்டும் ரூ.35 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக ஆட்சியில் 40 கல்லூரிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. தற்போதைய ஆட்சியில் தமிழகம் முழுவதும் 37 கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழி சிறப்பை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்காக கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சிகள் ரூ.3 கோடியில் நடத்தப்படும். அரசுக் கல்லூரிகளில் கலைத் திருவிழா ரூ.5 கோடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும். மேலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை பரிந்துரை செய்ய பாடப்பிரிவு பரிசீலனைக் குழு அமைக்கப்படும்.
இதுதவிர அரசுக் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு செமஸ்டர் கல்வி பயில்வதற்கு அழைத்துச் செல்லப்படுவர். அரசுக் கல்லூரிகளில் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்படுத்தப்படும். மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கான பிரத்யேக தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்படும்.
சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் நவீன வசதிகளுடன் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். மேலும், அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். இதற்காக கல்லூரி ஆசிரியர் மாநில பயிற்சி மையம் அமைக்கப்படும். இதுதவிர அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சி மையம் மேம்படுத்தப்படும்.
தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு தொடங்க அனுமதி அளிக்கப்படும். அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு அமைக்கப்படும். அரசுக் கல்லூரிகளில் நிறுவன மேலாண்மைக் குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.