அட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அறிவிப்பு விடீயோவே அனைத்து மொழிகளிலும் கவனம் ஈர்த்தது. இதில் அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணி மட்டுமே இறுதியாகி இருக்கிறது. இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக நடிக்க மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார். இதில் மொத்தம் 3 நாயகிகள் இருக்கிறார்கள். இதில் ஒருவராக மிருணாள் தாகூர் தேர்வாகி இருக்கிறார். ஜான்வி கபூர் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரிடம் இதர 2 நாயகிகளுக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவில் ராஜமவுலி இயக்கி வரும் படத்துக்குப் பிறகு அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இது அமைந்துள்ளது. இதில் பணிபுரிய பல்வேறு ஹாலிவுட் கலைஞர்கள் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.