பகல்காம் தாக்குதல், இந்து – முஸ்லீம் மோதல் அல்ல: காஜல் அகர்வால்!

பகல்காம் தாக்குதல், பயங்கரவாதம் மற்றும் மனிதநேயத்துக்கு இடையேயான மோதல். இந்து – முஸ்லீம் மோதல் அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் அல்லாது உலக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர் – நடிகைகள், விளையாட்டுப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து – முஸ்லீம் இடையேயான பிரச்னை கிடையாது. ஆனால் அதைத்தான் வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். அங்கு நடந்தது பயங்கரவாதத்துக்கும் மனிதநேயத்துக்குமான மோதல். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை எப்போதும் பயத்தையும் அதிக எதிர்ப்பு உணர்வையும் மட்டுமே உருவாக்கும். ஆனால் நாம் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். நாம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஒன்று பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து – முஸ்லீம் இடையேயான பிரச்சினை குறித்து தைரியமாக பேசியுள்ளதாக நடிகை காஜல் அகர்வாலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.