திருமாவளவனின் கருத்துகள் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன: ஜெயக்குமார்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு பரபரப்பான கருத்துகளை கூறி வரும் நிலையில், திருமாவளவனின் கருத்துகள் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் என் நண்பர். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. இப்ப கூட அவர் வந்தால் பேசுவேன். ஆனால் அரசியல் ரீதியாக கருத்துகள் என்பவை நேற்று ஒரு கருத்து- இன்று ஒரு கருத்து- நாளை ஒரு கருத்து என மாறுபட்டதாக இருக்கக் கூடாது. ஒரு தெளிவான நிலையில் இருக்க வேண்டும். ஆனால் திருமாவளவனின் கருத்துகள் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரையும் சிறு துரும்பாக இருந்தாலும் அதை மதிக்கின்ற பண்பு முக்கியம். ஒரு கட்சி பெரியது, சிறியது என பார்ப்பது இல்லை. ஒரு கட்சி என்ற அடிப்படையில் நாம் உரிய மரியாதை கொடுப்போம். ஆனால் திமுகவைப் பொறுத்தவரையில், கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை கொடுக்கப்படுவது இல்லை. திமுக கூட்டணிக் கட்சிகள், ஒரு கசப்பான அனுபவத்தோடு கசப்பான மனநிலையுடன்தான் இருக்கின்றனர். இன்றைக்கு திருமாவளவன் கருத்தும் இதன் வெளிப்பாடுதான்.

அதிமுக பொதுச்செயலாளரைப் பொறுத்தவரையில், அதிமுக கூட்டணிக்கு எந்த கட்சிகள் வரும் என்பது குறித்து கேட்கும் போது, இன்னும் 10 மாதம் இருக்கிறது. பொறுத்திருந்துதான் சொல்வோம் என்றார். அந்த கருத்தை ஒட்டித்தான் நானும் கருத்து தெரிவிக்க முடியும். அரசியலில் நிறைய மாற்றங்கள் வரலாம். அப்படி வரும் போது பொறுத்திருந்து பார்ப்போம். அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்பதுதான் பொதுச்செயலாளர் கருத்து. அந்த வகையில் இன்னும் பல கட்சிகள், கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. ஆகையால் காலங்களும் மாறும் காட்சிகளும் மாறும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் விசிக இடம் பெற்றிருந்தாலும் தம்மிடம் பிற கட்சிகள் பேரம் பேசின; விஜய் கட்சி விடுத்த அழைப்பை நிராகரித்தேன்; பாமக இடம் பெறும் கூட்டணியில் இடம் பெறமாட்டோம்; அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எல்லாம் கவலையும் இல்லை என தொடர்ந்து பேசி வருகிறார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.