செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் நேரில் ஆய்வு!

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, இச்செஸ் போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட வேண்டும். இச்சதுரங்க விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் போட்டி நடைபெறும் அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகளை வைத்திட வேண்டும். விளையாட்டு போட்டி நடைபெறவுள்ள அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டு வருகின்ற நவீன உள் விளையாட்டரங்கம், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள 22,000 சதுர அடியிலான அரங்கத்தினை விளையாட்டரங்கமாக மேம்படுத்தும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்க மிகச் சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வருகின்ற வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர விடுதிகளில் 2,000 அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இப்போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முதல் பங்களிப்பாக 92 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.