நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது திங்கட்கிழமை வழங்கப்பட்டது. இதற்கிடையே விருது பெற்ற பிறகு ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டியளித்த அஜித், பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அஜித் கூறிய கருத்துகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட அஜித், சரியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இதுபோன்ற விருதுகள் காட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், இன்னுமே தனக்குப் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதை நம்ப முடியவில்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அஜித், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்னுமே என்னால் நம்ப முடியவில்லை.. நான் இன்னுமே மனதளவில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவனாகவே உணர்கிறேன்.. எனவே, இங்கே இருந்து இதை (விருது பெறுவது) அனுபவிப்பது அசாதாரணமாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறிய அவர் தனது குடும்பத்தினர், ரசிகர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொன்னார்.
அஜித் மேலும் பேசுகையில், “விருது அறிவிக்கப்பட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற தருணங்கள் தான் உங்களை ஊக்குவிக்கும்.. அல்லது குறைந்தபட்சம் நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்ற நம்பிக்கையைத் தரும்.. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் செய்து வருவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைத் தரும். நான் சரியான பாதையில் செல்வதாக உணர்கிறேன்.. இதனால் நான் என் வேலையில் கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
தல உள்ளிட்ட பட்ட பெயர்கள் குறித்த கேள்விக்கு அவர், “எனக்கு இதுபோன்ற பட்டங்களில் நம்பிக்கை இல்லை.. என்னை அஜித் அல்லது ஏகே என்று பெயரைச் சொல்லி அழைப்பதே பிடித்திருக்கிறது.. நான் ஒரு நடிகன்.. மற்ற வேலைகளைப் போல இதுவும் ஒரு வேலை.. என் வேலைக்குச் சம்பளம் வாங்குகிறேன். எனது வேலையால் புகழும் செல்வமும் உடன் கிடைக்கிறது.. எனக்கு என் வேலை ரொம்ப பிடித்து இருக்கிறது. இதனால் தான் கடந்த 33 ஆண்டுகளாக இதை நான் செய்து வருகிறேன். நான் என் வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்க முயல்கிறேன்.. அளவுக்கு அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கிறேன்.. ஒரே நேரத்தில் அதிக வேலைகளைச் செய்ய மாட்டேன். இதனால் எனக்கு இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிகிறது” என்றார்.
தொடர்ந்து தனது மனைவி ஷாலினி குறித்துப் பேசிய அஜித், “நான் ஏதோ பொலிடிக்கலி கரெக்டாக என்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஷாலினிக்கு நன்றி சொல்லவில்லை.. அவரது பங்களிப்பு முக்கியமானது.. திருமணத்திற்கு முன்பும் ஷாலினி மிகவும் பிரபலமான நபர்தான்.. ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் நபராக இருந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு எனக்காகச் சினிமாவை விட்டுவிட்டு, எனது பயணத்தில் ஒவ்வொரு அடியிலும் உறுதுணையாக இருக்கிறார். ஒரு சில முறை என்னுடைய முடிவுகள் தவறான போதும் கூட, மனம் தளராமல் உறுதுணையாக இருந்துள்ளார். எனது சாதனைகளில் முழுப் பாராட்டுகளும் அவருக்குத் தான் சென்று சேர வேண்டும்” என்றார்.