சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளம் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இடும்பாவனம் கார்த்தி புகார் அளித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 28 ஏப்ரல் அன்று தொடர்ச்சியாக ஸ்டோரி பதிவுகள் ஒன்றில், சீமான் மீது நேரடியான கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த பதிவுகளில் “சீமானின் தலை துண்டாக்கப்படும்”, “விரைவில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு இரங்கல் செய்தி வரும்”, “பதவிக்குப் போட்டி நிலவும்” என்ற வகையில் மிகக் கோரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து இடும்பாவனம் கார்த்தி தனது புகாரில், சீமான் அவர்கள் எந்த இன மக்களையும் இழிவுபடுத்தியதும், அவதூறாக பேசியதும் இல்லையெனவும், மாறாக தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரும் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பாளர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது சமூக ஊடக கணக்குகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இடும்பாவனம் கார்த்தி கூறுகையில், சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், தேனி பகுதியைச் சேர்ந்த அடையாளமற்ற நபர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளனர். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்த கார்த்திக், ஆளும் திமுகவுக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஆனால் மற்றவர்களுக்கு இதே நீதி கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். “சமூக வலைதளங்களில் அவதூறாக பேசுவது, தனிநபர் தாக்குதல், ஆபாசமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்றவை உச்சத்தை எட்டியுள்ளன. ஒருவேளை இதே மிரட்டல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்டிருந்தால், இந்நேரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஈரோடு தேர்தல் பரப்புரையின் போது, நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஒருவர், “ஸ்டாலினை உருவ பொம்மையை எரிப்போம் என்பதற்கு பதில் ஸ்டாலினை எரிப்போம்” என்று பேசியதாகவும், பின்னர் அதை உணர்ந்து திருத்திய பிறகும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் இடும்பாவனம் கார்த்திக் சுட்டிக்காட்டினார். “ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக ‘தலையை வெட்டுவோம், மரணம்’ என்று பதிவிடப்பட்டு, பட்டாக்கத்தி புகைப்படங்களுடன் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று அவர் குற்றம்சாட்டினார்.

நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அதன் தலைவருக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவது ஆளும் அரசுக்கு வெட்கக்கேடு என்று இடும்பாவனம் கார்த்திக் கூறினார். “நாம் தமிழர் கட்சி என்றால் இளக்காரமா? எங்களுக்கு எதிராக ஆபாசமாகவும், தனிநபர் தாக்குதலாகவும், குடும்ப ரீதியாகவும் பேசலாமா? வசைச் சொற்களைப் பயன்படுத்தலாமா? இதற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றால், மக்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“நாங்கள் சட்டத்தை நம்புகிறோம், ஜனநாயகத்தை நம்புகிறோம், அமைப்பு முறையை நம்பி புகார் அளித்துள்ளோம். ஆனால், தேவையற்ற சட்ட உள்ளங்கை சிக்கல்கள் ஏற்படாதவாறு காவல்துறையும், ஆளும் அரசும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அமைதியாக இருப்பதாக சட்டமன்றத்தில் பேசியதை சுட்டிக்காட்டிய கார்த்திக், “அவ்வளவு அமைதியாக இருக்கும் மாநிலத்தில் இத்தகைய மிரட்டல்கள் நடைபெறுவது ஆளும் அரசுக்கு வெட்கக்கேடு,” என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்த மிரட்டல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மக்கள் முடிவு செய்வார்கள் என்று அவர் எச்சரித்தார்.