சாட்டை துரைமுருகன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

சாட்டை துரைமுருகனைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் யூடியூபில் பல அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களைப் பேசி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சைப் கிரைம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் நடத்து கொண்டதாகக் கூறி யூட்டுபரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் என்ற சாட்டை துரைமுருகன் மீது நான்கு வழக்குகள் காவல்துறை பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சாட்டை துரை முருகனின் மனைவி மாதரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசியல் காரணங்களுக்காகத் தனது கணவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குண்டர் சட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு மீது உரியக் காலத்திற்குள் பரிசீலிக்கவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. இதன் காரணமாகத் தனது கணவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யூட்டுபர் சாட்டை துரைமுருகனைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சாட்டை துரைமுருகனுக்கு பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரிய மனு மீது பரிசீலிக்க அரசு கால தாமதம் ஏற்பட்டுள்ளதால். துரைமுருகனுக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் பேச்சுரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் வழங்கி உள்ள அடிப்படை உரிமை எனவும், ஆனால் அதற்கும் ஓர் எல்லை உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் கணவர் துரைமுருகன் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.