பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜேபி நட்டா கடந்த 3ம் தேதி சென்னை வந்தார். சென்னையில் இருந்து டெல்லி செல்ல விமான நிலையம் புறப்பட்டபோது அவர் கார் விபத்தில் சிக்கியதாகவும், அதன்பிறகு அவர் வேறு காரில் சென்றதாகவும் தகவல் வெளியானது பற்றி தமிழக காவல்துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக இருப்பவர் ஜேபி நட்டா. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். கடந்த 3ம் தேதி ஒருநாள் பயணமாக ஜேபி நட்டா சென்னை வந்தார். அதன்பிறகு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அவர் காரில் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். குண்டு துளைக்காத காரில் அவர் பயணித்தார். அப்போது அவரது கார் விபத்தில் சிக்கியதாகவும், இதனால் வேறு காரில் அவர் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இது ஜேபி நட்டாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று பாஜகவினர் கூறினர்.
இந்நிலையில் தான் இந்த விவகாரம் பற்றி தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவருமான ஜேபி நட்டா மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவு உடையவர். அவர் 02.05.2025 அன்று சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டது. அதன்படி அவருக்காக குண்டு துளைக்காத வாகனமும் மற்றும் அவருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிப்பதற்காக இரண்டு வாகனங்களும் தமிழ்நாடு பாதுகாப்பு படையினர் பயணிக்க மூன்று வாகனங்களும், ஆம்புலன்ஸ் மற்றும் அரசு மரபு வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது. இத்தகைய குண்டு துளைக்காத வாகனங்கள் மத்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட பணிமனைகளில் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு பிரிவின் பயன்பாட்டில் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. இத்தகைய வாகனங்கள், தொழில்நுட்ப காரணங்களால் அதிவேகமாக செல்லக்கூடாது என நிபந்தனைகள் உள்ளன.
03.05.2025 அன்று காலை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு மதியம் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் பொற்கோவிலுக்கு சென்று பின்னர் இரவு 8.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி பயணிப்பதற்காக மாலை 5.30 மணியளவில் வேலூரிலிருந்து புறப்பட்டு மத்திய அமைச்சர் சென்னை திரும்பினார். இரவு 7.30 மணியளவில் தாம்பரம் மாநகரம் எல்லைக்குட்பட்ட வண்டலூர் மிஞ்தர் வெளிவட்ட சாலையில் திருமுடிவாக்கம் அருகில் வந்து கொண்டிருந்தனர். குண்டு துளைக்க முடியாத வாகனங்கள் அதிக எடை கொண்டவை. இதனால் தொழில்நுட்ப காரணங்களுக்காகவும் இவற்றை மற்ற வாகனங்களின் வேகத்திற்கு இணையாக இயக்குவது இல்லை. ஆனால் மத்திய அமைச்சரின் நேர்முக உதவியாளர் வற்புறுத்தியதின் பேரில் வாகனங்கள் மணிக்கு 120 கிமீக்கும் அதிகமான வேகத்தில் இயக்கினர். அதனால் குண்டு துளைக்காத காரினை மற்ற வாகனங்களுக்கு இணையான வேகத்திற்கு இயக்க முற்பட்டபொழுது, பின்பக்க சக்கரத்தில் உருவான உராய்வு சத்தத்தினை அறிந்து அத்தகவலைக் கூறிவிட்டு, ஓட்டுநர் அவ்வாகனத்தை மத்திய அமைச்சரின் பாதுகாப்பினைக் கருதி வாகனத்தின் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நிறுத்தினார்.
உடனடியாக ஜேபி நட்டாவை அரசு மரபின்படி வழங்கப்பட்ட மாற்று வாகனத்தில் ஏற்றி, உரிய பாதுகாப்புடன் சென்னை விமானநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதில் அமைச்சர் பயணம் செய்த வாகனத்திற்கு எவ்வித சேதமோ அதன் உள்ளிருந்தவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு குறைபாடோ ஏற்படவில்லை. மத்திய அமைச்சர் பயணம் செய்த குண்டு துளைக்காத வாகனம் உடனடியாக நிறுத்தப்பட்டபொழுது 8வது வாகனத்தின் இடது பின்புறம் மற்றும் 10வது வாகனத்தின் வலது முன் பகுதி மிகக் குறைந்த சேதம் எற்பட்டது. மிக முக்கிய விருந்தினர்களுடன் பயணிப்பவற்கள், வாகனத்தின் வேகத்திறனுக்கு அதிகமான வேகத்தில் வாகனங்களை இயக்க வற்புறுத்த வேண்டாமென அறிவுறுத்தல் செய்யப்பட்டதுடன், வாகனத்தின் வேகத்திறனுக்கும் கூடுதலான வேகத்தில் இயக்க கூடாதென காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பாதுகாப்பு பிரிவல் உள்ள குண்டு துளைக்காத வாகனங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதால் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு முக்கிய விருந்தினர்கள் வரும்பொழுது அவர்களின் வேண்டுகோளின்படி இவ்வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.