“பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள்.
வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம், வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். அதன்படி மாணவிகள்: 96.70 %, மாணவர்கள்: 93.16 % தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது.