அதிமுக எம்எல்ஏக்கள் அடித்த கொள்ளைகளை எடப்பாடி கண்டுகொள்ளவே இல்லை: பொன்னையன்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் அடித்த கொள்ளைகளை அவர் கண்டுகொள்ளவே இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளதாக பரபரப்பு ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. அதில் அவர் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி. கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் என தற்போது அவர் இருக்கும் இபிஎஸ் அணியில் உள்ள முக்கிய புள்ளிகள் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஆடியோ உரையாடலில் இடம்பெற்றுள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு:-

எடப்பாடி பழனிச்சாமி தமது தலைமையிலான ஆட்சி காலத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடித்த கொள்ளைகளை கண்டுகொள்ளவில்லை. தங்கமணி மற்றும் வேலுமணி கட்டுப்பாட்டில் தான் கொங்கு பகுதி எம்.எல்.ஏக்கள் உள்ளனர். திமுகவுக்கு எதிராக பேட்டி கொடுப்பதையே பல அதிமுக நிர்வாகிகள் நிறுத்திக் கொண்டுள்ளனர். ஸ்டாலினுடன் தங்கமணி ரகசிய கூட்டு வைத்துள்ளார். அத்துடன் அவர் திமுக உடனும் இணக்கமாக உள்ளார்.

தளவாய் சுந்தரம் இந்தியாவிற்கே தரகர் வேலை பார்க்கின்றவர். பல கோடிகளை சுருட்டி தான் மட்டுமே வைத்துள்ளார். கே.பி.முனுசாமியை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஓரங்கட்டி வைத்திருந்தனர். திமுக அமைச்சர் துரைமுருகன் சிபாரிசில் குவாரியை 20ஆண்டுகளுக்கு டெண்டர் எடுத்துள்ளார். மாதம் 2 கோடி வரை அவருக்கு வருமானம் கிடைக்கிறது. பெட்ரோல் பங்க்கும் வைத்துள்ளார்.

நான் பொதுக்குழுவில் தீர்மானம் படிப்பதற்கு முன்பே சி.வி.சண்முகம் மைக் முன் பாய்ந்து தீர்மானம் ரத்து என கத்தி அனைத்தையும் கெடுத்துவிட்டார். அவர் கட்டுப்பாட்டில் அவர் சமூக எம்.எல்.ஏக்கள் 19 பேர் உள்ளனர். அவரும் சாதி அரசியல் தான் செய்கிறார். ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் நூறு, இருநூறு கோடிக்கு சொத்துகள் குவித்துள்ளனர்.எனவே அவர்கள் சொத்துகளை பாதுகாக்க அடக்கி வாசிக்கின்றனர்.
எதிர்க்கட்சி தலைவராக அண்ணாமலை செயல்படுவது போல் அதிமுக நிலை ஆகிவிட்டது. எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் ஜெயலலிதா ஆன்மாவும் தான் இனி அதிமுகவை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த ஆடியோவில் பொன்னையன் பேசியதாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.