குரு பூர்ணிமா நாளில் கருணாநிதிக்கு நன்றி சொன்ன குஷ்பு!

குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.

நடிகை குஷ்பு ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதே திமுகவில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி என எந்த ஆதரவு நிலையிலும் இல்லாமல் இருந்த குஷ்பு திடீரென அடுத்த தலைமை பற்றி கருத்து கூறி சர்ச்சையில் சிக்கினார். திமுகவில் இருந்த போதே பிரச்சினையை சந்தித்த குஷ்பு காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். பாஜகவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை பதிவிட்டார். இருந்த போது அங்கும் கோஷ்டி பிரச்சினையில் குஷ்புவிற்கு முக்கியத்துவம் குறைந்தது. காங்கிரஸ் கட்சியை விட்டு விட்டு பாஜகவில் தஞ்சமானார் குஷ்பு. கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிந்ததும் மீண்டும் நடிக்கத் தொடங்கிய குஷ்பு, தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீரா சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குரு பூர்ணிமா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அதில், “இன்று குரு பூர்ணிமா 2022 முன்னிட்டு, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதநேயம், சமத்துவம், அரசியல் கருணை, எப்போதும் சுயமரியாதையை விட வேறெதுவும் பெரிதல்ல ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்த ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்கள் எப்போதும் நினைவுகூறப்படுவார், என் பார்வையில் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் இருப்பார். நன்றி அப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.