‘சார்பட்டா 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருப்பதாக ஆர்யா தெரிவித்தார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகின படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியாகிய இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினர். இப்படத்தின் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், இப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் இன்னும் கொண்டாட்டமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சார்பட்டா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை பா.ரஞ்சித் வெளியிட்டார். ஆனால், அதன்பிறகு அப்படம் தாமதம் ஆனது. பா.ரஞ்சித் ‘தங்கலான்’ படத்தில் பிசியானார். தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்யா, ‘சார்பட்டா 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். தற்போது ‘வேட்டுவம்’ படத்தில் பா.ரஞ்சித் பிசியாக இருப்பதால், அதை முடித்துவிட்டு இப்படத்தின் பணிகளை தொடங்க உள்ளதாக அவர் கூறினார்.