திமுக நிர்வாகியின் வெறிச்செயலை கண்டுகொள்ளாத போலீஸ்?: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் காவல் துறையைக் கண்டித்து அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் வருகிற 21ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக ‘சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அரக்கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, ஏற்கெனவே வேறு பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வரும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் R. தெய்வச்செயல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்த மாணவியை பின்தொடர்ந்தும், கைபேசி வாயிலாகவும் காதலிப்பதாகத் தொடர்ந்து வற்புறுத்தியும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தொடர்ந்து டார்ச்சர் செய்தும் மிரட்டிய நிலையில், ‘எனக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது’ என்று தெரிவித்த நிலையிலும், தொடர்ந்து திமுக நிர்வாகி தெய்வச்செயல் வலுக்கட்டாயமாக அந்த மாணவியை கடத்திச் சென்று தனது உறவினர்களுடன் சோளிங்கர் அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு, பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மேலும் ஒரு பெண், கல்லூரி மாணவியிடம் ஏற்கெனவே ஐந்து வருடத்திற்கு முன்பு திமுக நிர்வாகி தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவும், மேலும், இந்த திமுக நிர்வாகி இதுபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ள விபரத்தையும் தெரிவித்துள்ளார். எனவே, கல்லூரி மாணவி, திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கெனவே பலருடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னையும் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், தவறான வழியில் ஈடுபடுத்த துன்புறுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்ததாகவும், கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை, தான் கூறிய முழு விபரங்களையும் எப்ஐஆர்-ல் குறிப்பிடாமல் பதிவு செய்ததால், அறிக்கையை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் பேட்டியை அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன.

திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற ‘சார்’களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கல்லூரி மாணவியின் புகாருக்கு உரிய நேரத்தில் முழு விபரங்களையும் எப்ஐஆர்-ல் பதிவு செய்யாமல் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையைக் கண்டித்தும்; தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.5.2025 – புதன் கிழமை காலை 9.30 மணியளவில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ. அரி, Ex. M.P., ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு. ரவி, M.L.A., ஆகியோர் முன்னிலையிலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள்.

மேலும், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.