மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டத்தை நேற்று நடத்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிகளில் பயிலும் 11 அல்லது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணத்தால் மாணவர்களுக்கு தேவையான லேப்டாப் கொள்முதல் செய்து வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். எதிர்காலத்தில் உயர் தொழில்நுட்ப உலகில் நமது இளைஞர்கள் அறிவாயுதம் ஏந்தி வெற்றிவலம் வருவதை உறுதிசெய்திடும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக 2025-26 ஆம் நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம், லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உயர்கல்வித் துறையின் மூலம் 22.4.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உயர் அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி மெட்ராஸ், மத்திய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம் பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப தரநிலைக் குழுவினர் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள மடிக்கணினியின் செயல்திறன், மெமரி அளவு, சாஃப்ட்வேர்ஸ், பேட்டரி திறன், ஹார்ட்வேர்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களுக்கான விவரக்குறிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் மென்பொருள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழுவினர் ஒப்பந்தப் புள்ளி ஆவணத்தை தயார் செய்து சமர்பித்தவுடன் டெண்டர் தொடர்பான செயல்பாடுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும் மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள விநியோகத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கல்லூரி பயிலும் மாணவர்களை திறன் மிக்க மாணவர்களாக உருவாக்கிடவும், அவர்கள் உயர்கல்வி கட்டாயம் பயில்வதை உறுதி செய்திடவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தொழில்நுட்பத் திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025 2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.