இன்றைக்கு என்னிடம் கேட்டீர்கள் என்றால் பெரியாரே எங்களுக்கு பெரும் தவறு.. எங்களுக்கு பெரியாரே ஒரு மண்ணு தான். எங்களுக்கு சொந்தத்திலேயே ஆயிரம் பெரியார் இருக்காங்க.. எங்கே இருந்தோ வந்த பெரியார் எங்களுக்கு தேவை இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசினார்.
சென்னையில் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில், கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் ‘வழக்காடுவோம் வாருங்கள்’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்விகள் கேட்கப்பட்டு கலந்துரையாரல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது பெரியார் குறித்து சீமான் பேசினார். நிகழ்ச்சியில், கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். பெரியார் பற்றிய மேடைகளில் இதற்கு முன்பு நீங்கள் பேசிய பேச்சுகள் தற்போது சமூகவலைதளங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறதே? அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-
உயிர்மெய் அரசியலை எடுத்து வைக்கிறோம். மொழி காக்க.. இனம் காக்க.. மண் காக்க.. பிறகு மண்ணின் வாழும் மக்களின் மானம் காக்க.. அவர்களின் நலன் காக்க அரசியலை முன்னெடுத்து வைக்கிறோம். அதை பற்றி பேசாமல், 20 ஆண்டுகளுக்கு முன்னாடி பேசுனதயே திரும்ப திரும்ப பேசுறது என்பது ஆக்கப்பூர்வமாக இல்லை.. அன்றைக்கு நான் அப்படி பேசியிருந்தால் அது தவறு.. பெரியாரை மேடையில் பேசியது தவறு.. இன்றைக்கு என்னிடம் கேட்டீர்கள் என்றால் பெரியாரே எங்களுக்கு பெரும் தவறு.. இது எங்கள் கோட்பாடு.. இன்று என்னிடம் கேட்டார் இது பெரியார் மண் என்று. எங்களுக்கு பெரியாரே ஒரு மண்ணு தான். இதை விட வேற ஒன்னும் கிடையாது. எங்களுக்கு சொந்தத்திலேயே ஆயிரம் பெரியார் இருக்காங்க.. எங்கே இருந்தோ வந்த பெரியார் எங்களுக்கு தேவை இல்லை. இது தான் எங்கள் கருத்து. இதை திரும்ப திரும்ப விளக்க தேவையில்லை.
இன்னைக்கு உங்கள் மகன் என்ன அரசியலை எடுத்து வைக்கிறேன். எவ்வளவு ஆழ்ந்த நோக்கத்தோடு.. அன்போடு இந்த மண்ணையும், மக்களையும் நேசித்து.. உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள், என்ன அரசியலை எடுத்து வைக்கிறோம் என்பது தான் முக்கியம். நாங்கள் இப்போது எந்த அரசியலை எடுத்து வைக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும். கடந்த காலத்தை பற்றியே பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. நான் ஒன்று இப்போது உங்களிடம் கேட்கிறேன்.. நாங்க பேசிட்டோம் என்று சொல்கிறீர்களே.. பரிசுத்த ஆவியில் இட்லி வேகும் என்று கேட்ட கருணாநிதிக்கு ஏன் ஓட்டு போட்டீர்கள் என்று உங்களிடம் கேட்டால் பதில் இருக்குதா?.. சன்னியாசிகள் எல்லாம் கன்னியாசிகள் ஒன்றும் இல்லையே என்று கூறிய கருணாநிதியை மன்னிக்க முடியும்.. ஆனால் என்னைய மன்னிக்க முடியாதா? எல்லாத்தையும் மன்னிக்கிற நீங்க.. என்னை மன்னிக்க மாட்டீங்க போலயே.. கர்த்தரே மன்னித்தாலும் நீங்க மன்னிக்க மாட்டீங்க போலயே.. இத விடுங்க.. இப்போது என்ன அரசியல்.. இப்போது நாங்க எடுத்து வைக்கிற அரசியல் என்ன.. அது இந்த நாட்டு மக்களுக்கு தேவையாக இருக்கிறதா இல்லையா.. தேவை என்றால் ஆதரியுங்கள்.. இல்லையென்றால் ஆதரிக்க வேண்டாம்.. அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.