அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டி.டி.வி. தினகரன்

அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் பெரியளவில் வெடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் நீதிமன்றத்தை நாடியுள்ளன. மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதற்கிடையே பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது. பின்னர் பொன்னையன் அந்த ஆடியோவில் இருப்பது தன் குரல் அல்ல என மறுத்துள்ளார். அந்த ஆடியோவில் பேசிய நாஞ்சில் கோலப்பனோ பொன்னையனிடம் பேசிய ஆடியோ தான் என்கிறார்.

இந்நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிச்சாமி, ராஜபக்சே போல் செயல்படுகிறார். விரைவில் ராஜபக்சேக்கு நடந்த நிலையை எடப்பாடி பழனிச்சாமிக்கு நிகழும். ஒருபுறம் ஓ.பன்னீர் செல்வமும் மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமியும் துரோகிகள். அம்மாவால் கட்டிக் காக்கப்பட்ட கழகம் இன்று இவர்கள் கையில் சிக்கி சீரழிகிறது. இதை தற்போது நாங்கள் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடியும்.

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்கு தாடியை போல் தேவையில்லாத ஒன்று என அண்ணா கூறியதை தான் நாங்களும் தெரிவிக்கிறோம், திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் அதுதான்.

பொன்னையன் கூறியதை தான், நான் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறேன். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் உள்ளதையே இது காட்டுகிறது. அதிமுகவில் தற்போது அனைவரும் பண மூட்டைகளை வைத்துக் கொண்டிருகின்றனர். அதிமுகவில் உள்ளவர்கள் சகுனி கூட்டம். அம்மாவின் கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.