நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் வெளியீடு!

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இருக்கும் வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத்தினால், அவைக்குறிப்பில் இருந்து சபை தலைவர்கள் அதனை நீக்கி விடுவர்.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசாங்கத்தை விமர்சிக்கும் திறனைத் தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ ப்ரையன், தான் அந்த வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் யதார்த்தத்தை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளும் இப்போது தடை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். “மக்களவையில் நான் எழுந்து நின்று, போலித்தனமான நடவடிக்கைகளுக்கு வெட்கப்பட வேண்டிய திறமையற்ற அரசாங்கத்தால் இந்தியர்கள் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பேசக்கூடாது என்று சொல்கிறீர்களா?” என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா கடுமையாக சாடியுள்ளார்.