சென்னை வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சென்ற தவெக பெண் நிர்வாகி மீது போலீஸ் பூட்ஸ் காலில் உதைத்த சம்பவத்துக்கு விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார். விஜய்யின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன், திமுகவுக்கு எதிர்க்கட்சியை பார்த்தாலே பயம் என்று விமர்சித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேரித்து வைக்கும் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் அந்தப் பகுதியில் இருந்த சுமார் 15 குடிசைகள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத்துறை கடுமையாக போராடி தீயை அணைத்தாலும், அந்தப் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெக கட்சியினரும் அந்தப் பகுதி மக்களுக்கு உதவி செய்ய சென்றுள்ளனர். அப்போது ஒரு போலீஸ், தவெக பெண் நிர்வாகியை தன் பூட்ஸ் கால்கள் மூலம் உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று தவெக தோழர்கள் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அடிப்படை பொருட்களை வழங்கினார்கள். இதைப் பொருத்துக் கொள்ள முடியாத போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தி, கங்காவதி என்ற பெண் நிர்வாகியை உதைத்துள்ளார். இது மக்களாட்சி இல்லை. அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தம்பி விஜய்யின் அறிக்கையை பார்த்தேன். தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் உதவி செய்வதை காவல்துறை தடுத்துள்ளது. அவர் தமிழகத்தில் நடப்பது மக்களின் ஆட்சியா அல்லது பாசிச ஆட்சியா என்று அழகாகவும், வலிமையாகவும் கேட்டுள்ளார். இதற்கு திமுகவினர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இப்படி நடப்பது முதல்முறை அல்ல. நாங்கள் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்க சென்றபோது கூட, எங்களை கையெழுத்து வாங்க விடாமல் சுமார் 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்தனர். நாங்கள் அதற்கு அடி பணியாமல் கையெழுத்து வாங்கிவிட்டு தான் அங்கிருந்து நகர்ந்தோம். தொடர்ந்து திமுகவுக்கு பயம் இருந்து கொண்டே இருக்கிறது.
அதனால் எதிர்க்கட்சிகள் என்ன நடவடிக்கை செய்தாலும், என்ன போராட்டம் நடத்த அறிவித்தாலும் உடனே அதற்கான அனுமதியை ரத்து செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் பதற்றத்தில் உள்ளனர். அதனால் எதிர்க்கட்சிகள் எதை செய்தாலும் பயப்படுகிறார்கள். தங்களைப்பற்றிய மோசமான ஆட்சியை எதிர்க்கட்சிகள் மக்களிடம் கொண்டு சென்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள்.
அண்ணன் ஸ்டாலின் பதற்றத்துடன் இருக்கிறார். டெல்லிக்கு போவதற்கு முன்பும் பதற்றம், டெல்லி போகும்போதும் கூட பதற்றம், டெல்லி போய் வந்த பிறகும் பதற்றம் என ஒரே பதற்றமாக உள்ளனர். டாஸ்மாக் ஊழலில் ஏதோ நடக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சொல்லியுள்ளது. டாஸ்மாக் முறைகேடுகளை பற்றி பத்திரிகை, ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்த ஊழியர்களை நீக்குவோம் என்றால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை என்ன செய்வது.
உச்ச நீதிமன்றம் விடுமுறைக்காக டாஸ்மாக் வழக்குக்கு இடைக்கால தடை கொடுத்துள்ளது. அதை ஏதோ டாஸ்மாக் ஊழலில் இருந்து வெளிவந்ததை போல நாடகமாடி கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என அண்ணன் ஸ்டாலினிடம் கேட்டதற்கு, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார். நீங்கள் மறைத்த செய்தியை மீண்டும் மீண்டும் மறைப்பதால், அரைத்த மாவையே மீண்டும் அரைக்க வேண்டியுள்ளது. சொல்வதை மீண்டும் மீண்டும் கூறினால் தான் நீங்கள் செய்யும் குற்றங்கள், முறைகேடுகள் குறித்து மக்களுக்கு தெரியும். அதைத்தான் எதிர்க்கட்சிகள் கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.