கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன்: கார்த்திக் சுப்புராஜ்!

கிரீன் ஸ்கிரீன் படங்கள் எடுப்பதை வெறுப்பதாகவும், உண்மையான கதைக்களத்தில் படம் எடுப்பதையே விரும்புவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் இயக்குவது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ் “ஆயிரம் கோடியில் படம் இயக்க வேண்டுமென்றால், அதில் எண்ணற்ற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இடம்பெற வேண்டியுள்ளது. அதனை கிரீன் ஸ்கிரீனில் படம் பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. அதுபோன்று படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன். உண்மையான கதைக்களத்தில் உண்மையான மனிதர்களுக்கு மத்தியில் உண்மையான படத்தை எடுக்கவே விரும்புகிறேன். அந்த ஆயிரம் கோடியில் 20 அல்லது 30 படங்களை இயக்குவேன்” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கமர்ஷியல் படங்களை எடுத்துவந்தாலும், அதில் உண்மைத் தன்மையை விரும்பும் இயக்குநராகவே உள்ளார். இறைவி, ஜிகர்தண்டா, மெர்க்குரி உள்ளிட்டப் படங்கள் இவர் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவை. இதுவரை 9 படங்களை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.