தடுப்புச் சுவர் கேட்டால் திரைச்சீலை அமைப்பது தான் திராவிட மாடல் அரசா?: அதிமுக!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் ரோட் ஷோ நடத்தும் நிலையில் கழிவுநீர் கால்வாயை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு துணி வைத்து மூடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. இருபக்க தடுப்புச் சுவர் கேட்டால் ஒருபுறம் திரைச்சீலை அமைப்பது தான் திராவிட மாடல் அரசா? எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாததால் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் போட தயாரா? என அதிமுக மருத்துவர் அணியினை செயலாளர் டாக்டர்.சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தந்தார். அங்கு நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்குழுவில் கலந்து கொள்கிறார். முன்னதாக நடைபெற இருக்கும் பிரம்மாண்ட ரோட் ஷோ நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொள்கிறார். இதை அடுத்து மதுரை திமுக சார்பில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் ஸ்டாலினுக்காக ஒரு கிலோமீட்டர் தூர சாக்கடை கால்வாயை துணி வைத்து மூடியதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் கூறியுள்ளதாவது:-

மதுரையில் திமுக பொதுக்குழு நடைபெறுகிறது. இதற்காக மக்கள் முகம் சுழிக்கும் வகையில் ஆடம்பரமாக ஏற்பாடு செய்து வருகிறார்கள், குறிப்பாக அவனியாபுரத்தில் இருந்து புதூர் வரை ரோடுஷோவை ஸ்டாலின் நடத்துகிறார். குறிப்பாக ரோடு ஷோ நடத்தும் இடங்களில் எல்லாம் வியாபார கடைகள் உள்ளன. அந்தக் கடை வாசலை மறைத்து தான் தடுப்புகளை அடைத்துள்ளார்கள். குறிப்பாக சாலையோர அப்பாவி வியாபார அப்பாவி பெருமக்களுக்கும் கடுமையான நெருக்கடியை கொடுத்துள்ளார்கள். இன்றைக்கு ஸ்டாலின் திமுக அரசால் மதுரை மக்கள் கடுமையான சொத்து வரி உயர்வு, கடுமையான மின் கட்டண உயர்வு, கடுமையான பால்விலை உயர்வு இவைகள் மூலம் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மக்களிடம் இருந்து வரி என்ற பெயரில் சுரண்டிவரும் ஸ்டாலின் அரசு, மக்களின் அடிப்படைத் திட்டங்களுக்கு செலவழிக்கவில்லை. குறிப்பாக சாலையில் எல்லாம் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் ஸ்டாலின் நடத்தும் ரோடு ஷோ நடத்தும் சாலைக்கு மட்டும் மக்களின் வரிப்பணத்தின் மூலம் திடீரென்று சாலைகள் போடப்பட்டுள்ளது. மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதி அடையும் நிலையில். ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துவது என்பது ரோம்நகர் பற்றி ஏறியும்போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது.

இதே மதுரைக்கு கடந்த 10 ஆண்டுகள் அம்மா ஆட்சியில் 8000 கோடி அளவில் வளர்ச்சி திட்டங்களை புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் உருவாக்கி கொடுத்தார்கள். இதே மதுரையில் ஸ்டாலினும் அவரது மகனும் உதயநிதியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். என்று வீர வசனம் பேசினார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் 23 மாணவர்கள் பலியாகி உள்ளனர். இந்த 23 மாணவர்கள் மரணத்திற்கு காரணம் ஸ்டாலினும் அவரது மகன் கொடுத்த வாக்குறுதி தான். ஆகவே நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே நாங்கள் மக்களை ஏமாற்றி விட்டோம் ஆகவே இதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம் என்று திமுகவின் செயற்குழுவில் தீர்மானம் போட தயாரா?

மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தல்குடி பகுதியில் உள்ள பந்தல்குடி கால்வாயை முறையாக தூர்வாராத நிலையில், தொடர்ந்து கழிவுநீர் தேங்கும் பகுதியாக மாறிஇருந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு ஏற்பட்ட சிறுமழைக்கே கூட தாங்க முடியாமல் வெள்ளத்தில் இந்தப் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த சாலை வழியாக வரும் ஸ்டாலின் பார்வையில் கழிவுநீர் கால்வாய் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அலங்கார துணிகளை வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாயை சுற்றி அடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் உள்ள மக்கள் இந்த பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் பல ஆண்டுகளாக கடும் நோய்களால் பாதிக்கப்பட்டனர். இரு புறமும் தடுப்பு சுவர் குறித்து முதலமைச்சரிடம் தங்களது பிரச்சனை குறித்து கூறலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது பந்தல்குடி கால்வாய் பகுதியில் முழுவதுமாக வண்ண வண்ண திரைச் சீலைகளால் அடைக்கப்பட்டு திமுக கொடி நடப்பட்டுள்ளது. இரு பக்க தடுப்பு சுவர் கேட்டால் ஒரு புறம் திரைச்சீலை சுவர் அமைக்கலாமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.