“டூரிஸ்ட் பேமிலி” படத்துல “மம்பட்டியான்” பட பாடல்: தியாகராஜன் பெருந்தன்மை!

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் வெளியானது. இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.

‘டூரிஸ்ட் பேமிலி’ படம் ஓடிடியில் வெளியாகி வெற்றிநடை போட்டுவருகிறது. இந்த படத்தில் தான் ஒரு காட்சியில் பிரசாந்தின் ‘மம்பட்டியான்’ படத்தில் இடம்பெற்ற ‘மலையூரு நாட்டாம’ எனும் பாடலை படக்குழு பயன்படுத்தியிருந்தனர். படத்தில் இந்த காட்சி வரும்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. அதைத்தொடர்ந்து இந்த பாடல் மீண்டும் இணையத்தில் வைரலாகி வந்தது. இப்படத்தின் ஒரு காட்சியில் மம்பட்டியான் பாடல் இருக்கும், அதில் நடிகர் சசிகுமார் தனது இரு மகன்களுடன் நடனமாடும் காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில், அந்த பாடலுக்கு படக்குழுவினர் அனைவரும் நடனமாடி வைப் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டு பேசிய தியாகராஜனிடம், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் ‘மம்பட்டியான்’ பட பாடலை பயன்படுத்துவதற்கு உங்களிடம் அனுமதி கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தியாகராஜன், “அவர்கள் அனுமதி எல்லாம் வாங்கவில்லை. ஆனால் அந்த பாட்டு மீண்டும் மக்களிடம் ஹிட்டாகியுள்ளது. படக்குழுவை நான் வாழ்த்தினேன். அந்த பாடலை அவர்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக பலரும் என்னிடம் அவர்கள் மீது வழக்கு போடுங்க. பணம் கேளுங்க என்று சொன்னாங்க. ஆனா எனக்கு அந்த மாதிரி தோணவே இல்ல. அந்தப் பாடல் மறுபடியும் ஹிட் ஆனதுக்கு நான்தான் காசு கொடுக்கணும். பல வருடங்கள் கழித்து அந்த பாடல் மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.